புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் - படம் எப்படி?

மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு முழுக்க முழுக்க ஒரு மென்மையான காதல்கதை என்கிற ஆச்சரியத்தைக் கொடுக்கிற படம். தென்காசியைச் சேர்ந்த நாயகன் கிரிஷ் மதுரையில் பணியாற்றுகிறார். நண்பர்களுடன் தங்கியிருக்கிறார். கல்லூரிக்குப் போகும் நாயகி ஸ்ருஷ்டிடாங்கே மீது அவருக்குக் காதல், அதனால், அவர் கல்லூரிக்குப் போகும்போதும் வரும்போதும் பேருந்துநிறுத்தத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார், பார்த்துக்கொண்டிருக்கிறார், பார்த்துக்கொண்டேயிருக்கிறார். மூன்றாண்டுகள் ஒரு வார்த்தையும் பேசாமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறார் என்பதை இப்படித்தான் சொல்லியாகவேண்டும்.
    நாயகன் பார்க்கிறார் என்றதும் பதிலுக்கு வெறுப்பு முறைப்பு என்றில்லாமல் சிருஷ்டியும் புன்னகையுடன் பார்க்கிறார். நாயகன் க்ரிஷ் உடன் இருக்கும் நண்பர்களும் நாயகி சிருஷ்டியின் உடனிருக்கும் தோழிகளும், பேசு பேசு என்று படம் முழுக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கடைசிவரை ஒருவார்த்தை கூடப்பேசவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


    இப்படிப்பட்ட இந்தக்காதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படம். படம் முழுவதும் ஆளாளுக்குப் பேசிப்பேசியே சோதிக்கிறார்கள்.
    நாயகனாக நடித்திருக்கும் கிரிஷ், முதலில் ஒரு தோற்றம் அடுத்தொரு மாற்றம் என்றெல்லாம் வைத்துக்கொள்ளாமல், நாயகியைக் காதலுடன் பார்க்கும் காட்சியென்றாலும், நாயகி இன்னொருவனைக் காதலிக்கிறார் என்று நினைத்து சோகத்துடன் திரிவதாகட்டும், நண்பர்களிடம் கோபம் காட்டுவதாகட்டும், கடைசியில் அம்மாவிடம் உணர்ச்சி பொங்கப் பேசுவதாகட்டும் எல்லாக்காட்சிகளிலும் ஒரேமாதிரி இருக்கிறார். அவர் நல்லபாடகராகவே இருப்பது எல்லோருக்கும் நல்லது.

    படத்தின் பெரியஆறுதல் நாயகி சிருஷ்டிடாங்கேதான். சிரிக்கும்போது அவர் கன்னத்தில் உருவாகும் குழியில் பலர் விழுந்துகிடக்கிறார்கள். நாயகனை ஆசையுடன் பார்க்கும்போது ரசிகர்களுக்கும் ஏக்கம் வரும். பிடிக்காமல் நடக்கும் திருமணத்தில் அவர் சிக்கல் செய்திவிடுவாரோ என்று தோழி அறிவரை சொல்லப்போக, ஒண்ணும் கவலைப்பாடத காலையில் கழுத்த நீட்டுறேன் என்று கலங்கிப்போய் அவர் சொல்லும் பார்ப்போரையும் கலங்கவைக்கிறார்.

    நாயகனின் நண்பராக நடித்திருக்கும் நித்திஷ், நாயகியின் தோழி பூஜா, நாயகியின் அக்காவாக நடித்திருக்கும் மதுரைஜானகி உட்படப் பலரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
    ஏ.ஆர்.ரெஹைனாசேகரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணிஇசை பரவாயில்லை ரகம். வாலி எழுதிய கடைசிப்பாடல் என்றொரு சோகப்பாடல் வருகிறது. செந்தில்மாறனின் ஒளிப்பதிவில் மதுரைநகர வீதிகள் நன்றாக இருக்கின்றன.

    பார்த்தவுடன் காபிடே, அடுத்தநாளே காதல், அதற்கடுத்த நாள் பிரிவு என்று போய்க்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் ஒரு பெண்ணைப் பிடித்துப் போய் அவள் பின்னாலேயே ஒருவன் மூன்றாண்டுகள் சுற்றுகிறான் என்று படமெடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும் அதைத்தான் இந்தப்பட இயக்குநர் தம்பிசெய்யதுஇப்ராகிம் செய்திருக்கிறார். ஆனால் காதல் பற்றி கல்லூரிமாணவிகள் பேசுவது, நாயகனின் நண்பர்கள் பேசுவது, தேநீர்க்கடை வைத்திருக்கும் தேவராஜ், வாழ்க்கை குறித்து தத்துவம் பேசுவது என்று படத்தில் எல்லோரையும் நிறைப்பேசவைத்திருப்பது கஷ்டம்.

    நாயகனும் நாயகியும் மிகஅருகருகே பார்க்காமல் கடந்து செல்வது என்பது உட்பட பழையஉத்திகள் படத்தில் அதிகமாக இருப்பதும் சலிப்பூட்டுகின்றன. கல்லூரிமாணவியும் பேருந்து நடத்துநரும் பேசும் இரட்டைஅர்த்த வசனங்கள் முகம்சுளிக்க வைக்கின்றன.

    கதையை அதன்போக்கில் நகர்த்திச் சென்றுவிட்டு எங்கு முடிப்பதெனத் தெரி£யமல் தவித்திருக்கிறார் இயக்குநர். கடைசியில் நாயகனும் நாயகியும் பார்த்தவுடனே முடிந்துவிடுகிற படத்தை மேலும் சில காட்சிகளை வைத்துப் படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

    அழகான காதல்கதையாகியிருக்கவேண்டியது ஏனோ தவறிவிட்டது. ஏனென்பது புரியாத ஆதங்கம்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top