டண்டணக்காவுக்கு டி.ஆர். பச்சைக்கொடி? : மகிழ்ச்சியில் ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தை லஷ்மண் இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் எல்லாம் முடிவடைந்துவிட்டதால் வருகிற ஜூன் 12-ல் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையில் இந்த படத்தில் அனிருத் ‘டண்டணக்கா’ என்று தொடங்கும் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடலை ‘டங்காமாரி’ புகழ் ரோகேஷ் எழுதியிருந்தார்.

இப்பாடல் பதிவு செய்த வீடியோவை படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதில், டி.ராஜேந்தரின் வசனங்களையும் உள்ளே புகுத்தி இந்த பாடல் வெளிவந்தது.

இந்த பாடலை வைத்து டி.ராஜேந்தரை தவறாக சித்தரித்து சிலர் உருவாக்கிய வீடியோவும் இணையதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த ஜெயம் ரவிகூட, அவரை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இந்த பாடலை எடுத்திருக்கிறோம். இதுமாதிரி தவறாக சித்தரிக்கவேண்டாம் என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், டி.ராஜேந்தர் ரோமியோ ஜூலியட் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், டண்டணக்கா பாடலை தொடர்ந்து ஒலிபரப்புவும், புரோமோஷன் செய்யவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், இந்த பாடல் விவகாரம் தொடர்பாக தனக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இது படக்குழுவினருக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது.

ஒருகட்டத்தில் டண்டணக்கா பாடல் இல்லாமல்கூட படத்தை வெளியிடலாம் என்ற முடிவுக்கு படக்குழுவினர் இறங்கினர். இந்நிலையில், இந்த பிரச்சினையில் சுமூக தீர்வை எடுக்க முயற்சி செய்த படக்குழு, டி.ராஜேந்தருக்கு ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை திரையிட்டு காண்பித்துள்ளார்கள். முழு படத்தையும் பார்த்த டி.ராஜேந்தர் மிகவும் சந்தோஷமடைந்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது ரோமியோ ஜூலியட் படக்குழுவுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இதனால், உயர்நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் தாக்கல் செய்திருக்கும் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ‘டண்டணக்கா’ பாடலோடு இப்படம் வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top